Saturday, 19 October 2019

பாப்லோ நெருடா



ஜூலை 12, 1904  சிலி நாட்டில் பிறந்தவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர். கவிஞராகவும், சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், சமத்துவக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தார்.

இவரது இயற்பெயர் ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ ( Ricardo Eliecer Neftalí Reyes Basualto).

கவிதையில் ஆர்வம் கொண்ட பாப்லோ
செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின்பெயரால் உந்தப்பட்டு, தன் பெயரையும் பாப்லோ நெருடா என்று மாற்றிக் கொண்டார்.

இவர் பிறந்த சில நாட்களிலேயே இவர் தாய் மறைந்தார்.

இவர் தந்தை, டோனா ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை, மறுமணம்‌ செய்து கொண்டார். சிற்றன்னை நெருடாவின் மேல் அளவற்ற பாசம் கொண்டு வளர்த்தார்.

நெருடா, கார்டியா மார்வாடி பற்றி கூறும் போதெல்லாம் இவரைப் பெற்ற தாய் என்று பெருமிதத்துடன் கூறுவார்.

முதல் முயற்சியாக இவர் தனது எட்டாம் வயதில் எழுதிய கவிதை இவருடைய தாயைப் பற்றிய‌தே.

இவருடைய முதல் கவிதை தொகுப்பு 19ஆம் வயதில் " வைகறைக் கதிர்கள் (Books of Twilights) என்ற பெயரில் 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது.

இந்த கவிதை தொகுப்பு ஸ்பானிய மொழியில் பெரும் கிளர்ச்சியும், பரபரப்பும் ஊட்டியது

நெருடாவின் இருபதாவது வயதில்
இருபது காதல் கவிதைகளும் ஒரு விரக்தி பாடலும்" என்ற கவிதை தொகுப்பு வெளியானது.

இத்தொகுப்பு காதல் கவிதைகளில் அதிர்ச்சியும் நேரடித்தன்மையும் கொண்டது.

அத்தொகுப்பு ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் நெருடாவினை பிரபலமாக்கியது.

1927ஆம் ஆண்டு சிலியின் தூதராக பர்மா சென்றார். ஆறு ஆண்டுகள் இலங்கையிலும், சிங்கப்பூரிலும், பர்மாவிலும் அவர் தூதராகப் பணியாற்றினார்.

ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் எளிய மனிதர்கள் இவர்களின் வாழ்க்கை குறித்து நெருடா ஆற்றிய உரைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை

இந்த சமயத்தில் மாபெரும் இலக்கியவாதிகளான, ப்ராஸ்ட்,  ஜேம்ஸ் ஜாய்ஸ், வால்ட் விட்மன்போன்றவர்களுடைய எழுத்தின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது.

பெரு நாட்டுக்கு சுற்றுலா பாப்லோ அந்த நாட்டின் உலக அதிசயமாக கருதப்படும் பூர்வ குடிகளின் குடியிருப்பு அமைந்துள்ள மச்சு பிக்கு மலைக்கு சென்றார். அங்கு சென்ற அனுபவம்தான் அவரை “தி ஹைட்ஸ் ஆஃப் மச்சு பிக்கு” அல்லது “மச்சு பிக்கு மலையின் உயரம்” என்ற தலைப்பில் மிக நீண்ட கவிதை இலக்கியத்தை எழுதத் தூண்டியது. இரண்டு ஆண்டுகள் எழுதினார். அந்தக் கவிதை நூல் 12 பகுதிகளாக வெளியானது.

லத்தின் அமெரிக்க கவிஞரான மார்ட்டின் எஸ்படா இந்த கவிதை நூலைக் காட்டிலும் மிகப்பெரிய அரசியல் கவிதை வேறு எதுவும் இருக்க முடியாது என்று புகழ்ந்தார்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடிய கணியன் பூங்குன்றனார்போலவே நெருடாவும் "பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றேதான்" என்று பாடியுள்ளார்.

1953 ஆம் ஆண்டு அவருக்கு சோவியத் யூனியனின் ஸ்டாலின் அமைதி விருது வழங்கப்பட்டது.

1964ஆம் ஆண்டு ப்ரெஞ்சு தத்துவவாதியான ழான் பால் சார்த்தர் என்பவர் நோபல் பரிசு வேண்டாம் என்று மறுத்தார்.

அவர் மறுத்ததற்கு காரணம், அந்த ஆண்டு பாப்லோ நெருடாவிற்கு பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்றார்.

1971 ஆம் ஆண்டு பாப்லோ நெருடாவுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

"இருபதாம் நூற்றாண்டில் உலக மொழிகள் எல்லாம் கண்ட மாபெரும் கவிஞர் இவரே" என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், நெருடாவினைப் புகழ்கின்றார்.

1967 ஆம் ஆண்டு புரட்சியாளர் சே குவேரா கொல்லப்பட்டவுடன் அவருடைய நினைவாக ஏராளமான கட்டுரைகளை எழுதினார்.

1972 இறுதியில் அவர் உடல் நிலை ஒருவித நரம்பு நோய் இதனால் பாதிக்கப்பட்டது அதன்பின் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி 1973வருடம் பாபிலோ நம்மை விட்டு மறைந்தார் .

கவிஞராக எழுத்தாளராக சமூக புரட்சியாளராக அரசியல் நோக்கராக அரசியல்வாதியாக ஒரு நாட்டின் தூதராக பல்வேறு திறமைகளை கொண்ட பாப்லோவின் வரலாற்றை அவரின் கவிதைகளை வாசிக்க வேண்டும்.




No comments:

Post a Comment