கலம்பு + அகம் = கலம்பகம் என்றும் பிரித்துப் பொருள் கொள்வர்.கலம்புதல் - புகழ்தல். எனவே, கலம்புதல் என்பதற்கு விரித்தல் - புகழ்தல் என்ற பொருண்மையைக் காட்டலாம் என்பர்.
முதலில் வரும் கலிப்பாவில் பாட்டுடைத்தலைவன் புகழ் பாடப்படும்; பின்னர் நூல் முழுவதும் அப்புகழே விரித்துரைக்கப்பெறும்.
இத்தகைய புகழும் தன்மையாலும் விரிக்கும் தன்மையாலும் கலம்புதல் என்ற பொருண்மை அடிப்படையில் கலம்பகம் என வந்தது என்றும் கூறுவர்.
சிறந்த கலம்பக ஆசிரியர்கள்
புகழேந்திப்புலவர் (கி. பி. 12 ஆம் நூற்றாண்டு)
உதீசித்தேவர் இரட்டைப் புலவர்கள் (கி.பி.14 ஆம் நூ) தத்துவ ராயர் (கி.பி.16ஆம் நூற்றாண்டு),
குமரகுகுபரர், துறைமங்கலம் சிவப்பிரகாசர் (கி.பி. 17 ஆம் நூற்றாண்டு) ஆகியோரும் சிறந்த கலம்பக ஆசிரியர்களாகத் திகழ்கின்றனர்.
தமிழில் முதன்முதலாக வைணவக் கடவுள்மீது எழுந்த முதற்கலம்பகம் திருவரங்கக் கலம்பகமே. கி.பி. 17ஆம் நூற் றாண்டில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய இலக்கலம்பகத்தின் தொடர்ச்சியாகத் தமிழில் பல கலம்பக நூல்கள் எழுந்துள்ளன.
அடுத்து, கி.பி. 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர், படிக் காசுப்புலவர். சீனிப்புலவர், கந்தப்பையர் போன்றோர் கலம்பகம் பாடினர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் தமிழில் மிக அதிகமான கலம்பகங்கள் உருவாயின .தண்டபாணி சுவாமிகள், தொழுவூர் வேலாயுத முதலியார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை. இராசப்ப நாவலர், வீரராகவ முதலியார், அட்டாவதானம் சபாபதி முதலியார், பூண்டி அரங்கநாத முதலியார். திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார் போன்றோர் இருபதுக்கு மேற்பட்ட கலம்பகங்களை இயற்றியளித்துள்ளனர்.
தமிழில் மிக அதிகமாகக் கலம்பகம் பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளே ஆவார். புதுவைக் கலம்பகம் (இப்பொழுது கிடைப்பதில்லை). நெல்லைக் கலம்பகம், சென் னைக் கலம்பகம்,மயிலாசலக் கலம்பகம், பழநிக் கலம்பகம் வீரை நவநீதகிருட்டிணன் கலம்பகம் ஆகிய ஆறு கலம்பகங்களை இவர் இயற்றியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கலம்பகத்தின் பொதுவமைப்பு
1. பாட்டுடைத் தலைவரின் புகழைப் பாடுவது
2. தொடர்கதை அமைப்பற்றதாகப் பாடுவது
3. முதலில் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவும், அதனை யடுத்து ஒரு வெண்பாவும், பின்னர் ஒரு கலித்துறையும் இடம்பெற்று மேலே பல யாப்புகளில் பாடல் அமைப்பது
4. அம்மானை அல்லது ஊசல் முக்கிய உறுப்பாக அமைப்பது
5, வகுப்புப் பாடல் கட்டாயம் கட்டாயம் அமைப்பது
6. பத்துக்கும் மேற்பட்ட யாப்புகள் அமைப்பது
7. நூல் மண்டலித்து முடிய அமைப்பது
8. அந்தாதியாக அமைப்பது
9. நூறு என்ற அளவிலேயே பாடல்களை அமைப்பது
10. அகப்பாடல், புறப்பாடல் கலந்து அமைப்பது
11. எட்டிற்கும் மேற்பட்ட கலம்பக உறுப்புக்களை அமைப்பது
12. அரசர், முனிவர், கடவுள் என்ற மூவரையே பாடு பொருளாகக் கொள்வது
13. புதிய உறுப்புக்களால் பாடல் அமைப்பது
14. ஆசிரியர் கூற்றாக மட்டும் அமையாது, வேறு மாந்தர் கூற்றுகளும் வர அமைப்பது
என இவ்வாறு சில பொது மரபுகளை இக் கலம்பக இலக்கியங்கள் கொண்டுள்ளன. பாடல்களில் அந்தாதித் தொடர்பும், பாட்டுடைத் தலைவனின் தொடர்பும் ஒருங்கு அமைவது கலம்பக இலக்கியத்தின் தனிச்சிறப்பாகும்.
வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் வரலாறு
தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் பிள்ளை - பேச்சிமுத்து ஆகியோருக்கு 1839 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம்.
சீதாராம நாயுடு என்பவர் தொடர்பால் இவருக்கு முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமை பெற்றார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.
தென்காசி நகரை யடுத்த சுரண்டை என்னும் ஊரில் இவரது பெரிய தாயாரின் வீடு இருந்ததால், பெரிய தந்தையான சிதம்பரம் பிள்ளை என்னும் குணசீலர், சங்கரலிங்கரை அன்புடன் அழைத்துச் சென்று, வேண்டிய வசதியுடன் அவ்வூர்ப் பள்ளியிற் கல்வி பயிலச் செய்தனர். அப்படிச் சிலகாலம் தங்கிக் கற்றார். வயது எட்டரை ஆயிற்று.
அவ்வூரின் அருகிலுள்ள, சித்திரா நதிக் கரையில் ஓர் அம்மன் கோயில் உள்ளது. அங்கு பலர் கூடிச் சிறப்பான முறையில் தூய்மையுடன் வழிபாடு செய்யும் போது இவரும் சென்றிருந்தனர். அந்த அம்பிகைக்குப் பூமிகாத்தாள் என்ற பெயர் பலரும் கூறுவது கேட்டனர். இந்தப் பெயர் வந்த காரணம் யாது என்று அங்கிருந் தோரிடம் கேட்டனர். யாரும் தக்க பதில் கூறவில்லை. அந்த வேளையில் சங்கரலிங்கர் திருவருளின் செயலால் முன்னைய தொடர்பு காரணமாக ஒரு வெண்பா புதிய தாகக் கூறிப் பொருளும் கூறினர்.
"அமுதம் கடையும்நாள் ஆலம் வெடித்துத் திமுதமெனத் தீயெரித்துச்சென்ற(து)-அமுதமெனத் தீக்கடவுள் உண்டார் திருக்கண்டத் தைப்பிடித்துக் காத்ததனாற் பூமிகாத் தாள்.
என்பது அப்பாடலாகும்.
கவிதை பொழியும் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராம நாயுடு இவருக்கு "ஓயா மாரி" என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். தனது பதின்மூன்று வயதில் ’வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததால் வண்ணச்சரபம் என்றும், முருகன் புகழ் பாடியதால் இவர் "முருகதாசர்" என்றும் அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்றும் சிறப்பிக்கப்பட்டார். அரையில் கௌபீனமும், கையில் தண்டமும் கொண்டிருந்ததால் தண்டபாணி சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.
தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று திருத்தலங்கள் தரிசனம் செய்து பாடல்கள் இயற்றியுள்ளார். கேரளம் மற்றும் இலங்கைக்கும் இவர் பயணம் செய்துள்ளார்.
ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் ஆகிய நாற்கவியிலும் வல்லவர் இவர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்று தலங்கள் தோறும் சென்று பாடும் இயல்பினைக் கொண்டிருந்த இவர் பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார். திருவரங்கத் திருவாயிரம், திருமாலாயிரம், தில்லைத் திருவாயிரம், பழநித் திருவாயிரம், ஞாயிறு ஆயிரம், கணபதி ஆயிரம், புலவர் குருபரதத்துவம், புராணம், அருணகிரிநாதர் புராணம், அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத் தியல்பு போன்றவற்றுடன் அந்தாதி, கலம்பகம், கோவை, திருப்புகழ், வகுப்பு, மாலை, அலங்காரம், பதிகம், கவசம், பஞ்சகம் எனப் பலவகைகளில் பாடல்கள் இயற்றியருளியுள்ளார். இவர்
அணலிலும் புனலிலும் இட்டவை போக இப்பொழுது சுமார் 50,000 பாடல்கள் இவருடைய கையெழுத்தில் ஓலைச் சுவடிகளாகப் பாதுகாக்கப் பெற்றுள்ளன.
தண்டபாணி சுவாமிகள் சிறந்த சமயப் பற்றுடையவர். புலால்மறுத்தல், தெய்வ வழிபாட்டில் உயிரிப்பலியைத் தவிர்த்தல். இறை வழிபாட்டில் சமயச் சமரச நிலையை வலியுறுத்தல் ஆகியவற்றிற்காகத் தம் வாழ்நாள் முழுமையையும் அர்ப்பணித்தவர் இவர்.
சமய நிலையில் எத்தெய்வத்தை முன்னிறுத்திப் பாடினாலும் அத்தெய்வமே முதன்மையானது எனத் துணிந்து கூறும் இவர் மற்றொரு தெய்வத்தை நிந்திப்பது என்பது இல்லை. ஏனெனில் அனைத்துத் தெய்வ வடிவங்களும் ஒரே பரம்பொருளின் பல்வேறு வடிவங்கள் என்னும் சமரச நிலையைக் கொண்டவர் இவர். இருப்பினும், தொடக்க காலத்தில் சிவவழிபாடு கொண்டிருந்த இவர் திருமாலை அவ்வளவாக வழிபட்டாரில்லை. சமய நூல்களைக் கற்குமிடத்து நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் சிறப்பைப் படித்தறிந்த பின்பே வைணவ சமயத்தின் பெருமையை உணர்ந்தார் என அறிஞர்கள் கூறுவர்.
இவர் திருமால் மீது ஈடுபாடு கொண்டு பாடிய பாடல்கள் பலவாம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மீது திருஎழுகூற்றிருக்கை, திருவரங்கள் பேரில் திருவரங்கத் திருவாயிரம், திருவயிந்திரபுரம் பெருமாள் பதிகம் திருவனந்தபுரம் யமக அந்தாதி, திருக்கண்ணபுரம் பெருமாள் பதிகம். விஷ்ணுபுரம் ஒருபது கூற்றிருக்கை, அரி ஏகபாதத்தந் தாதி, திருமாலந்தாதி, திருமகளந்தாதி எனப் பல அரிய இலக்கியங்களை இவர் படைத்தளித்துள்ளார். இவையன்றி திருமால் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று அங்கு எழுந் தருளியுள்ள பெருமாள். இலக்குமி, அனுமார் ஆகியோர் பெயரில் பதிகம், திருப்புகழ், வெண்பா, அந்தாதி, வகுப்பு போன்றவற்றையும் பாடியுள்ளார். இவற்றுள் பல அவ்வப்போது அச்சாகியுள்ளன.பல இன்னும் அச்சாகது சுவடி வடிவில் உள்ளது.
இவர் இயற்றிய தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊரில் உள்ள நவநீதகிருட்டிணன திருக்கோயில் கலம்பகம் என்னும் இந்நூல் இன்னும் அச்சாகாமல் சுவடி வடிவிலேயே இருந்தது . இதை டாக்டர் வே. இரா. மாதவன் நூல் வடிவில் கொண்டு வந்தார்.
திருமால்மீது இவ்வாசிரியர் கொண்ட பக்தியும் ஈடுபாடும் இக்கலம்பகத்தால் நன்கு விளங்கும்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருவரங் திருவாயிரம் நூலைத் திருவரங்கக் கோயிலிலே அரங்கேற்று போது பலருக்கும் அழைப்பு அனுப்பினர். நாடெங்கிலுமிருந்து புலவர்கள் வந்து திருவரங்கக் கோயிலில் கூடி அவ்வமயம் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஜமீன் மருதப்பர் இவர்பால் அன்புகொண்டு தம் அவைப் புலவரை அரங்கேற்ற வைப திற்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மருதப்பர் அவைப் புலவராகிய கந்தசாமிப் புலவர் கண்ணபிரான் பேரில் அரிய பிரபந்தங்களைப் பாடியவராதலால் அவரை அனுப்பி வைத்தார்.
திருவரங்க அரங்கேற்றத்தில் இப் புலவரே கையேடு படிக் தண்டபாணி சுவாமிகள் ஆயிரம் பாடல்களுக்கும் பொருரைத்து அரங்கேற்றினார் என்பது அரிய வரலாற்று நிகழ் யாகும்.
"பொன்னையுறழ் தமிழரச னாகிவீரை
புரந்தஇத யாலயன் தன் புலவனாகிப்
புன்னைவிழை கண்ணனிசை புகன்றவாய்மை
புனைந்தகந்த சாமிப்பேர்ப் புலவன் தானும்"
"இவரனுப்பும் பத்திரிகை கண்டுசிந்தை
யினின் மகிழ்வுற் றரங்கநக ரினில்வந்துற்றார்"
"கருச்சிறைதீக் கிடுமரங்கத் தாயிரம்பாக்
கழறமுதற் துவக்கியெழிற் கந்தசாமி
திருச்சிறந்த கையேடு படிக்கத்தாமே
செப்புபொருள் விரித்தனர்மெய்த் தேவரார்ப்ப"
என்னும் பாடலடிகள் இவ்வரலாற்றை விளக்கும்.
'"தென்குருகைச் சடகோபன் தனக்குமுன்னாள்
செறிமதுர களிமமைந்தாங் இந்நாளிந்த
வின்குரற்பா வலன்கையேட்டினுக்குவாய்த்தா
னென்று பலர் தாமுமுரைத் தின்பமுற்றார்"
என அவ்வரங்கேற்ற நிகழ்ச்சி சிறப்புற்றதை விவரிப்பர்.
தண்டபாணி சுவாமிகள் நம்மாழ்வார் போன்றும் சுந்தசாமிப் புலவர் மதுரகவி போன்றும் அன்று ஏடுபடித்து எம்பெருமானின் பாடல்களுக்குப் பொருளுமுரைத்து அரங்கேற் றியதைச் சான்றோர்கள் பாராட்டி யுரைத்துள்ளனர். இத்தகைய பக்திப் பெருக்கினைக் கொண்ட புலவர்களைப் போற்றியவர் ஜமீன் மருதப்பர் என்பது குறிக்கத்தக்கதாகும்.
இருதயாலய மருதப்பர் வீர கேரம் புதூரில் உள்ள நவநீதகிருட்டிண சுவாமியிடம் கொண்டிருந்த பக்திப் பெருக்கும் தண்டபாணி சுவாமிகள் திருமால்மீது கொண்டிருந்த பக்திப் பெருக்கும் ஒருசேர இணைந்ததன் விளைவாகவே இந்த நவநீதகிருட்டிணன் கலம்பகம் உருவாகியுள்ளது என்பதை இக் கலம்பகத்தை ஆழ்ந்து கற்பார் நன்கு உணர்வர்.
கலம்பக நூலில் சிறந்த நூலாக வீ கே புதூர் நவநீத கிருஷ்ணன் கலம்பகம் உள்ளது. இந்த நூலைப் பற்றியும் இதனை இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பற்றியும் சுவாமிகள் எழுதிய பிற நூல்கள் பற்றியும் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். இது தமிழுக்கு நாம் அனைவரும் செய்யும் அரிய தொண்டாகும்
உயிர்க்கொலை கூடாது என்பதையும் எல்லாச் சமயங்களும் ஒன்றே என்பதை உணர்த்தியுள்ளார் வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள். இறுதி கட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திருவாமாத்தூர் எனும் பாடல் பெற்ற திருத்தலத்தில் கவுமார மடம் நிறுவி அங்கேயே தங்கவிட்டார். சுவாமிகள் எழுதிய பல்வேறு ஓலைச் சுவடிகள் இங்கு உள்ளது.
ஸ்வாமிகள். தனது 59 ஆவது வயதில் 1898 ஆம் ஆண்டு ஆனிமாதம் 23 ஆம் நாள் மறைந்தார்.
தொகுப்பு
ஜெயராம் ஜி
ஓவிய ஆசிரியர்
கடையநல்லூர்
சிற்றுளி ஜூலை - செப்டம்பர் இதழில் நான் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் பற்றி நான் எழுதிய கட்டுரை
No comments:
Post a Comment